Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Delhi Election Result 2025 Parvesh Verma: டெல்லி சட்டமன்ற தேர்தலில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுடெல்லி தொகுதியில், அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜகவின் பர்வேஷ் வர்மா யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Delhi Election Result 2025: 3 முறை புதுடெல்லி தொகுதியை கைப்பற்றி, 2 முறை முதல்வராக அரியணை ஏறிய அர்விந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தி, வீட்டுக்கு அனுப்பியுள்ளார், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா. இந்நிலையில், தோல்வியையே சந்திக்காத அர்விந்த் கெஜ்ரிவாலை முதல் முறையாக வீழ்த்தி முடிசூடியுள்ள பர்வேஷ் வர்மா, அடுத்த டெல்லி முதல்வராக வருவதற்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளதால், அவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
யார் இந்த பர்வேஷ் வர்மா.?
டெல்லியில், 1996 முதல் 1998-ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தவரும், பாஜகவின் மூத்த தலைவருமான சாகிப் சிங் வர்மாவின் மகன் தான் இந்த பர்வெஷ் வர்மா. பர்வேஷின் சித்தப்பா அசாத் சிங், வடக்கு டெல்லியின் மேயராக இருந்தவர். இப்படி பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் 1977-ல் பிறந்தார் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா..
டெல்லி பப்லிக் ஸ்கூலில் பள்ளி படிப்பை முடித்த பர்வேஷ், இளநிலை பட்டத்தை டெல்லி பல்கலைக்கழகத்திலும், MBA பட்ட படிப்பை FORE SCHOOL MANAGEMENT-டிலும் பயின்று முடித்தார்.
இவர், அரசியலில் எண்ட்ரி கொடுத்தது, 2013 டெல்லி சட்டமன்ற தேர்தலில் தான். மெஹ்ரவுளி தொகுதியில் போட்டியிட்ட பர்வேஷ், முதல் தேர்தலிலேயே வெற்றியை பதிவு செய்தார்.
ஆனால், அத்துடன் நிற்காத இவர், 2014 மக்களவை தேர்தலில், மேற்கு டெல்லி தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டு அதிலும் வெற்றி அடைந்தார். குறிப்பாக 2019 தேர்தலில் ஏறக்குறைய 6 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் இவர் பெற்ற வெற்றி, டெல்லியில் உள்ள பாஜகவின் முக்கிய தலைகள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
2020ம் ஆண்டு கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்று சொன்ன காரணத்திற்காக, ஒரு எம்பியை 24 மணி நேரம் தடை செய்தது தேர்தல் ஆணையம். அந்த எம்பி வேறுயாருமில்லை பர்வேஷ் வர்மாதான்.
இந்நிலையில் தான், கெஜ்ரிவாலின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுத நினைத்த பாஜக, அவரை 2024 மக்களவை தேர்தலில் களமிறக்காமல், FOCUS-ஐ சட்டமன்ற தேர்தல் பக்கமாக திருப்புமாறு அறிவுறித்தியது. அதைத் தொடர்ந்து, கெஜ்ரிவாலுக்கு எதிராக 2025 தேர்தலில் பர்வேஷை களமிறக்கியது பாஜக. தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய பர்வேஷ் “கெஜ்ரிவாளை நீக்குங்கள்.. டெல்லியை காப்பாற்றுங்கள்.. என்ற முழக்கத்தை சத்தமாக முன்வைத்தார்”.
இவர் தான் தற்போது டெல்லி சட்டமன்ற தேர்தலில், அனைத்து பாஜக தலைவர்களின் குரலை காட்டிலும் வீரியமாக முழங்கி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
மேலும், டெல்லியில் நிலவிய கடுமையான சுற்றுச்சூழல் மாசு, நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள், பெண்களுக்கான பாதுகாப்பு, டெல்லியின் வளர்ச்சி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பர்வேஷ். குறிப்பாக யமுனை நதியை சுத்தபடுத்துவோம் என்ற ஆம் ஆத்மியின் வாக்குறுதி என்ன ஆனது? ஏன் தூய்மைபடுத்தவில்லை என்ற பர்வேஷின் கேள்வி மக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கெஜ்ரிவாலை தீவிரவாதி என குறிப்பிட்டது தொடங்கி, அதிரடியான கருத்துகளை பேசுவது தான் பர்வேஷின் ஸ்டைல். இந்நிலையில், அவரது ஸ்டைலை டெல்லி மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாகத்தான், தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.
கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா
மொத்தம் 14 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தி, பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா வெற்றி பெற்றார். இதன் மூலம், 3 முறை தொடர் வெற்றி பெற்று, 2 முறை டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை, அவருடைய சொந்த தொகுதியான புது டெல்லியிலேயே தோற்கடித்து, டெல்லி சட்டமன்றத்துக்குள் நுழைகிறார் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா.
டெல்லியின் பெரும்பான்மை சமூகமான ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் பர்வேஷ் என்பதால், அடுத்த டெல்லி முதல்வராகும் வாய்ப்பும் இவருக்கு பிரகாசமாக இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளார்கள். இந்நிலையில், 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பியுள்ளார் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா.