வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


கோவை மாநகராட்சியில் உள்ள 100  வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர்.  நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.




கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 46 வது வார்டில் பாஜக சார்பில் சுதாகர் என்பவர் போட்டியிடுகிறார். இவர் இரத்தனபுரி பகுதியில் மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை தள்ளுவண்டியில் தள்ளிபடி சென்று, காய்கறி விற்பனை செய்தபடி சுதாகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாஜக வெற்றி பெற்றால் மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதேபோல மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். 




இதேபோல கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரன் போட்டியிடுகிறார். இவர் இன்று கண்ணப்ப நகர் பகுதியில் பாட்டுப் பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆர்மோனியம் பெட்டியை தோளில் மாட்டியபடி, வீடு வீடாக சென்ற மகேஸ்வரன் பாடல்களை பாடியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது துப்புரவு பணியாளர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரிடமும் தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். தன்னை வெற்றி பெறச் செய்தால் மக்களின் குறைகளை தீர்க்க முழு மூச்சாக உழைப்பேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.




கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 97 வது வார்டில் திமுக சார்பில் 22 வயதான நிவேதா சேனாதிபதி போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று திமுக தொண்டர்களுடன் சென்ற நிவேதா, துண்டு பிரச்சுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி வாக்கு சேகரித்தார். வார்டில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.