NDA meeting:  தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மோடி மக்களவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.


NDA எம்.பிக்கள் கூட்டம்:


பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. அதைதொடர்ந்து, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.  


ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டம்:


இன்று நடைபெறும் எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக் கூட்டணியின் மக்களவை தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. தொடர்ந்து, எம்.பிக்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசு தலைவரை சந்தித்து மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரக்கூடும். அதன்படி, வரும் 9ம் தேதி மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதனிடையே, கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இன்றே இதற்கான முடிவை எட்டவும் முனைப்பு காட்டி வருகிறது. 


கூட்டணி பெரும்பான்மை:


பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டுமே 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. அதேநேரம், ஆந்திராவில் அவர்ளது கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் 16 தொகுதிகளையும், ஜனசேனா 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும், சிராக் பஸ்வானின் லோக் ஜனதா தளம் 5 இடங்களையும் வென்று கூட்டணிக்கான பெரும்பான்மையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


சந்திரபாபு & நிதிஷின் நிபந்தனைகள் என்ன?  


சந்திரபாபு நாயுடு 3 கேபினட் உட்பட 6 அமைச்சர் பதவிகள், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் மக்களவை சபாநாயகர் பதவி போன்ற நிபந்தனகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுமுனையில் நிதிஷ்குமார் 3 கேபினட் உட்பட 5 அமைச்சர் பதவிகள், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, மக்களவை சபாநாயகர் பதவி போன்ற நிபந்தனகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று கூட்டணியில் உள்ள சிராக் பஸ்வான், குமார சுவாமி மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் சில கோரிக்கைகள் மற்றும் நிபந்தனகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக பாஜக இன்று மாலைக்கும் முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.