தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அக்கட்சியின் தேசிய செயலாளர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களமிறங்குகிறது. அக்கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பாஜக டெல்லி மேலிடம் முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதனை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் செயல்படும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மறுத்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தங்களை கூட்டணியில் சேர்க்க அதிக இடங்கள், துணை முதலமைச்சர் பதவி போன்ற ஆஃபர்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இருந்தாலும் கடைசியில் தவெக  தனித்து தான் போட்டியிடுவதாக அறிவித்தது. 

இந்த நிலையில் ஏ.என்.ஐ. நிறுவனத்திற்கு பேட்டியளித்த நிதின் நபினிடம், “2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் வருகை” குறித்த கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த நிதின் நபின், முதலில் அரசியலில் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர் விஜய் பற்றி பேசும்போது, “என் பார்வையில் அவர் அரசியலில் முதல் முறையாக முயற்சி செய்கிறார். எனவே அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Continues below advertisement

அதேசமயம் அரசியலில் முழுநேரமாக உழைக்க வேண்டும். இன்று ஏதோ ஒன்று கிடைத்துவிட்டு, நாளை எங்கே செல்வது என்பதை தீர்மானிக்கும் விஷயமல்ல அரசியல்.  இதில் ஒருவரின் நிலைமை எப்படி அமைகிறது என்பதை காலம்தான் சொல்லும்” என கூறினார். .

தொடர்ந்து விஜய் கூட்டத்தை ஈர்ப்பதை ஒப்புக்கொண்ட நிதின் நபின், எனினும் இந்த விஷயத்தில் முன்கூட்டியே முடிவெடுப்பது என்பது சரியானது அல்ல. அது நிலையானதா என்பதை கணிக்க நேரமும், முயற்சியும் தேவை என குறிப்பிட்டார். அதனால் இந்த நிலையில் விஜய் பற்றி எதுவும் சொல்வது சரியாக இருக்காது. மக்களைத் திரட்டி ஒன்றிணைப்பதற்கு ஈர்ப்பு ஒரு காரணிதான்.  அது காலப்போக்கிலும் தொடர்ச்சியான முயற்சியாலும் மட்டுமே வரும் என்று நிதின் நபின் தெரிவித்துள்ளார்.  

தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவல் பற்றி கருத்து தெரிவித்த நிதின் நபின், எங்கள் கட்சி தற்போது அதிமுகவுடனான கூட்டணியில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவுடனான கூட்டணி  செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு நன்றாக உள்ளது. ஒருவேளை எங்களுக்கு ஏதேனும் தேவை இருந்திருந்தால்,' பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கும். ஆனால் தற்போதைக்கு  நாங்கள் எங்களின் தற்போதைய கட்டமைப்பிற்குள்ளேயே. செயல்பட்டு வருகிறோம். அப்படியான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை  என்று அவர் கூறினார்.