Five State Election 2026: இந்தியாவின் தெற்கில் மிகவும் முக்கியமான மாநிலமான தமிழ்நாடு, இந்தியாவின் கிழக்கில் மிகவும் முக்கியமான மாநிலமான மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று அறிவித்தார்.
தேர்தல் தேதி:
அசாம், கேரளா, பாண்டிச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதியும், தமிழ்நாட்டிற்கு வரும் ஏப்ரல் 23ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. மேற்கு வங்கம் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குப்பதிவு நடக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய ஆட்சியாளர்கள் என்பதைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.
824 தொகுதிகள்:
5 மாநிலங்களுக்கும் சேர்த்து 824 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் 5 மாநிலங்களிலும் அமைக்கப்பட உள்ளது. சராசரியாக இந்த 5 மாநிலங்களுக்கும் சேர்த்து 7 ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் 100 சதவீதம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். 5 மாநிலங்களிலும் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை பணியில் 40 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர்.
17.4 கோடி வாக்காளர்கள்:
5 மாநிலங்களுக்கும் சேர்த்து 17.4 கோடி வாக்காளர்கள் தகுதியான வாக்காளர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளும், மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளும், கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளும், புதுச்சேரியில் 30 தொகுதிகளும், அசாமில் 126 தொகுதிகளும் உள்ளது. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் இந்த 5 மாநிலங்களிலும் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளில் 5 மாநிலங்களிலும் சேர்த்து 8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை.
செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு கவுன்டர்கள் அமைக்கப்படும். அதிகபட்சமாக 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும். தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.
இனி தினசரி அரசியல் சதுரங்கம்:
இதனால், இந்த 5 மாநிலங்களில் ஆளுங்கட்சி புதியதாக எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்க இயலாது. காபந்து அரசாக இன்று முதல் செயல்படுவார்கள். தேர்தல் ஆணையம் அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டைத் தீவிரமாக கண்காணிக்கும். அதேசமயம், அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மிகவும் தீவிரமாக மேற்கொள்வார்கள்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இன்னும் 40 நாட்கள் அளவிலே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டை எந்த கட்சியினரும் முழுமையாக முடிக்கவில்லை. இதனால், தொகுதிப் பங்கீடு, யார்? யார்? எந்தெந்த தொகுதியில் போட்டி? வேட்பாளர்கள் யார்? என்ற பல பரபரப்பு அடுத்தடுத்து இனி தினசரி அரங்கேறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
