கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு - கேரள எல்லையான கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று காலை பிரச்சாரம்  மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ஆனைகட்டி பகுதியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடுகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தும் பகுதிகளில் இந்த பகுதியும் ஒன்று. இந்த பகுதிக்கு வரக்கூடிய நிதி அனைத்தும் மத்திய அரசு நிதி. இந்த பகுதியில் மலைவாழ் குழந்தைகளுக்கு ஏகலைவா பள்ளிகள் கொண்டு வரவேண்டும். மலைவாழ் குழந்தைகள் இருக்கும் எல்லா பகுதிகளில் ஏகலைவா பள்ளிகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என தெளிவாக இருக்கின்றோம்.


மலைவாழ் மக்களுக்கு வீடு, சிலிண்டர் என மத்திய அரசின் சலுகைகள்  அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். வரும் ஏப்ரல் 19 தேதி தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி அமர வேண்டும். பிரதமர் மோடி வந்தவுடன் தான் மழைவாழ் மக்களுக்கு தேவையான ரோடு வசதிகள் போன்றவை வழங்கப்படுகின்றது. 100 சதவீத திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர வேண்டும். செங்கல் சூளையில் மண் எடுப்பதில் பிரச்சினை இங்கே இருக்கின்றது. திமுக குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றது. இவர்களே பிரச்சினையை துவங்கி விட்டு, பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் எடுப்பதாக சொல்லுவார்கள். இந்த பிரச்சினைக்கு சுற்றுசுழல் அமைச்சரிடம் பேசி தீர்வு காண வேண்டும். மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல், இயற்கைக்கு பதிப்பு இல்லாமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.




குடியினால் பிரச்சனைகள் ஏற்படும்


இது போன்ற பகுதிகளை தேடி அடுத்த 10 ஆண்டுகளில் அனைவரும் வருவார்கள். இந்த பகுதி பொழிவாகவும் இருக்க வேண்டும், வளர்ச்சியும் இருக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் மரியாதை இல்லாமல் இருந்தது. ஆனால் பழங்குடி மக்களுக்கு அரசியல் அதிகாரம் பாஜக வழங்கி திரௌபதி முர்முவை குடியரசு தலைவராக்கி இருக்கின்றோம். மோடி பழங்குடி மக்களுக்கு பாதுகாவலனாக இருக்கின்றார். இந்த பகுதியில் மனித விலங்கு மோதலுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.  இந்தக் ஒரு வண்டி மட்டும்தான் டெல்லி போகும், மற்றது எல்லாம் லோக்கல் வண்டி. டெல்லிக்கு போகுற ஓரே வண்டி இந்த வண்டிதான்.


இங்கு இருக்கும் டாஸ்மாக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். இந்த ஒரு டாஸ்மாக்கை எடுப்பது மட்டும் வேலையல்ல, எல்லா டாஸ்மாக்கையும் எடுக்க அரசியலுக்கு வந்து இருக்கின்றோம். இந்த குடியினால் எல்லாருக்கும் பிரச்சினைகள் ஏற்படும். ஜனநாயகத்தில் குடிக்க கூடாது என்று சொல்லவில்லை, உங்களுடன் இருக்கின்றேன்,  சாராயத்தை குடித்து வயிற்றை புண்ணாக்கி கொள்ளாமல், கள்ளை குடியுங்கள். கேரளாவில் அப்படித்தான் இருக்கின்றது. ஆனைகட்டி பகுதியில் திமுக நம்மை விலை பேசி விடலாம் என நினைக்கின்றனர், அதை நாம் உடைத்து ஏறிய வேண்டும்” எனத் தெரிவித்தார்.