திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பதிவாகிய போக்சோ வழக்குகள் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் தரவுகளை வெளியிட்டுள்ளார்.
தனியார் மற்றும் திமுக ஆதரவு யூ டியூபர் அண்ணாமலையின் தரவுகள் பொய் என்று கூறியிருந்த நிலையில், இந்த தரவுகளை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
39,999
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று, மத்திய சட்டத் துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேவால், பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கொடுத்த பதில் தரவுகளின்படி, 2021 - 2025 வரை ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை, 39,999. இந்தத் தரவுகள், தேசிய நீதித்துறை தரவுத் தளம் (NJDG) படி, எடுக்கப்பட்டவை.
நான் பேசும்போது, 39,900 வழக்குகள் என்று, 99 வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி விட்டேன் என்றுதான், உண்மையில் உண்மை சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும்.
ஆனால், திமுகவின் கையாலாகாத ஆட்சியை விமர்சிக்கும்போது மட்டும் துள்ளிக்குதித்து ஓடி வரும் YouTurn என்ற முதன்மையான தகவல் சரிபார்ப்பு இணைய தளம், எந்த ஆதாரமும் இல்லாமல், தங்களுக்கு விருப்பமான வழக்கு எண்ணிக்கையைக் கூறி, 20,989 வழக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன என்று கூறுகிறது.
எங்கிருந்து அழுத்தம்?
அதிலும் குறிப்பாக, அந்தச் சகோதரர், ஆண்டு வாரியாக வழக்கு விவரங்களைக் கூறும் போது, பதட்டத்தில், 2024 ஆம் ஆண்டு விவரங்களை இரண்டு முறை திருப்பிக் கூறுகிறார். எங்கிருந்து வந்த அழுத்தம் என்பது தெரியவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இட்லிக்கு சட்னி வைத்துக் கொள்வாரா அல்லது சாம்பாரா என்ற அளவில் தான், தமிழகத்தில் சில உண்மை சரிபார்ப்புத் தளங்கள் இயங்குகின்றன. ஆகவே, தங்கள் அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிட்டு, தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமென்று, இந்த so called fact check இணைய தளங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
