அதிமுகவில் 23 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது (மார்ச் 27) இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 127 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். பெரும்பாலானோர் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களாகவே உள்ளனர்.
இந்தப் பட்டியலில் 46 நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12 எம்எல்ஏக்கள், 7 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. மொத்த வேட்பாளர்களில் 17 பேர் பெண்கள் ஆவர்.
எந்த சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு இல்லை?
அரவக்குறிச்சி எம்எல்ஏ,
ஏற்காடு எம்எல்ஏ சித்ரா,
பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார்,
வானூர் எம்எல்ஏ சக்கரபாணி உள்ளிட்டோருக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
எந்தெந்த முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை?
1. ராசிபுரம் சரோஜா
2. வெல்லமண்டி நடராஜன்
3. சிவகங்கை பாஸ்கரன்
4. ஸ்ரீரங்கம் வளர்மதி
5. மாஃபாய் பாண்டியராஜன்
6. சேவூர் ராமச்சந்திரன்
7. சங்கரன்கோவில் ராஜலட்சுமி
ஆகிய முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் மீதமுள்ள தொகுதிகளில் காத்திருக்கும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் முழு வீச்சில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக கிட்டத்தட்ட முக்கால்வாசி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. குறிப்பாக, 150 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
மீதமுள்ள 17 தொகுதிகளில் சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. சென்னை தொகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் அறிவிக்க வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
