‘’நான் டாக்டர் ஆகியே தீரணும்’’ சொந்த காலையே வெட்டிக்கொண்ட இளைஞர்- வெளியான ஷாக் காரணம்!
மருத்துவ சீட்டுக்காக இப்படியா? சொந்தக் காலின் விரல்களை வெட்டிய மாணவன்! - உ.பி.யில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

மருத்துவப் படிப்பு மீதான ஆசை, ஒரு இளைஞரை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு உத்தரப் பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவமே சாட்சி. நீட் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டைப் பெற வேண்டும் என்பதற்காக, 20 வயது இளைஞர் ஒருவர் தன் சொந்தக் காலின் விரல்களையே வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரக்தியடைந்த சூரஜ், விபரீத முடிவு
உத்தரப் பிரதேசம் மாநிலம், ஜான்பூர் அருகே உள்ள காலிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் பாஸ்கர். எம்பிபிஎஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்பது இவரது கனவு. இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் அவரால் போதிய மதிப்பெண்களைப் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சூரஜ், விபரீத முடிவை எடுத்தார். மாற்றுத்திறனாளி சான்றிதழ் இருந்தால் மருத்துவ சீட் சுலபமாகக் கிடைத்துவிடும் என நம்பிய அவர், தன் இடது காலின் நான்கு விரல்களைத் தானே வெட்டிக்கொண்டார்.
பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், மர்ம நபர்கள் சிலர் தன்னைத் தாக்கி, காலை வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாக நாடகமாடியுள்ளார். இதை நம்பிய போலீசாரும் முதலில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால், விசாரணையின் போது சூரஜ் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
2026-ல் எப்படியாவது டாக்டர் ஆவேன்
இதனையடுத்து அவரது டைரி மற்றும் செல்போனை ஆய்வு செய்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவரது டைரியில், "நான் 2026-ல் எப்படியாவது எம்பிபிஎஸ் டாக்டர் ஆகிவிடுவேன்" என்று திரும்பத் திரும்ப எழுதியிருந்தார். மேலும், ஊனமுற்றோர் ஒதுக்கீடு பற்றிய தகவல்களை அவர் இணையத்தில் தேடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூரஜ் மீது, போலீஸாரைத் திசைதிருப்பியது மற்றும் பொய்யான புகார் அளித்தது உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மாணவர்களுக்கு எந்த அளவுக்குக் கடுமையான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதையும், இது போன்ற விபரீத முடிவுகள் வாழ்க்கையையே எப்படிப் புரட்டிப் போட்டுவிடும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.






















