யூபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்வான நபர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Continues below advertisement


போட்டித்‌ தேர்வுப்‌ பிரிவு


2025ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் யூ.பி.எஸ்‌.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்படுள்ளது. நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ போட்டித்‌ தேர்வுப்‌ பிரிவானது துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலினால்‌ 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது.


அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித்‌ தேர்வுகளை எளிதாக அணுகும்‌ வண்ணம்‌ பல பயிற்சித்‌ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


இந்நிலையில்‌ 2023- 24 க்கான தமிழ்‌நாடு அரசின்‌ பட்ஜெட்‌ உரையில்‌, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (TNSDC), அகில இந்திய குடிமைப்‌ பணி தேர்வு மையத்துடன்‌ (AICSCC) இணைந்து, ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ குடிமைப்‌ பணிகள்‌ தேர்வுகளுக்காக பயின்று வரும்‌ ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும்‌ இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும்‌ வகையில்‌ ஒரு திட்டத்தை செயல்படுத்தும்‌ என்று அறிவிக்கப்பட்டது.


1000 மாணவர்களுக்கு மாதம்‌ ரூ.7,500


இந்தத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, ஒவ்வொரு ஆண்டும்‌ 1000 சிவில்‌ சர்வீசஸ்‌ பயின்று வரும்‌ மாணவர்கள்‌, மதிப்பீட்டுத்‌ தேர்வு மூலம்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌. முதல்நிலைத்‌ தேர்வுக்குத்‌ தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும்‌ 10 மாதங்களுக்கு மாதம்‌ ரூ.7,500 வழங்கப்படும்‌.


முதல்நிலைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய்‌ ஊக்கத்தொகையாக வழங்கப்படும்‌. இத்திட்டம்‌ 10 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ கடந்த 2023-ஆம்‌ ஆண்டு முதல்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை


இதனைத்‌ தொடர்ந்து, 2025-ஆம்‌ ஆண்டின்‌ யு.பி.எஸ்‌.சி முதல்நிலை தேர்வில்‌ (25.05.2025) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத்‌ தேர்வுக்குப்‌ பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ கீழ்‌ இயங்கிவரும்‌ நான்‌ முதல்வன்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவின்‌ வாயிலாக 25,000 ரூபாய்‌ நேரடியாக மாணவர்களின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ செலுத்தப்படும்‌.


எப்போது விண்ணப்பிக்கலாம்?


இந்த ஊக்கத்தொகையைப்‌ பெறுவதற்கு நடப்பு ஆண்டில்‌ (2025) யு.பி.எஸ்‌.சி. முதல்நிலைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த மாணவர்கள்‌, https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டிருக்கும்‌ அறிவிக்கையைப்‌ படித்து பார்த்து, விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 02 கடைசித் தேதி ஆகும்.