நாட்டின் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்குத் தரமான கல்வியை உறுதி செய்யவும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Continues below advertisement

அதன் ஒரு பகுதியாக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது, பிரபலக் கல்வி நிறுவனமான பிசிக்ஸ் வாலா (Physics Wallah - PW) அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 மாணவர்களுக்கு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

யாருக்காக இந்தத் திட்டம்?

இந்தத் திட்டமானது எஸ்சி பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பயனாளிகள் ஆகியோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

பயிற்சிவிவரங்கள்

எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் மற்றும் மிகவும் கடினமாகக் கருதப்படும் குடிமைப் பணிகள் தேர்வுகள் (சிவில் சர்வீஸ் தேர்வுகள்) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்குப் பின்வரும் வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

  1. கட்டமைக்கப்பட்ட ஆன்லைன் பாடங்கள் மற்றும் லைவ் வகுப்புகள் பதிவு செய்யப்பட்ட காணொளி வகுப்புகள்.
  2. மாதிரித் தேர்வுத் தொடர்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள்.
  3. உயர்தரப் பாடக் குறிப்புகள் மற்றும் ஆய்வுப் பொருட்கள்.
  4. தனிப்பட்ட வழிகாட்டுதல் (Mentorship) மற்றும் சந்தேகங்களைத் தீர்க்கும் சிறப்பு அமர்வுகள்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக ஆன்லைன் இணையதளம் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழங்குடி மாணவர்களுக்கு இது போன்ற பயிற்சிகளை வழங்கப் பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம் தற்போதைக்கு எந்தவொரு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யவில்லை.

இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, "தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பைப் பெறவும், தரமான வளங்களை அணுகவும் இத்திட்டம் வழிவகுக்கும். இது சமூக உள்ளடக்கத்தையும் சம வாய்ப்பையும் ஊக்குவிக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தங்கள் லட்சியங்களை அடைய இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.