2023ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதித் தேர்வை நாடு முழுவதும் 9,45,918 பேர் எழுதிய நிலையில், தேர்வுக்கான விடைத்தாளை என்டிஏ வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்து, ஆட்சேபிப்பது எப்படி என்று காணலாம்.


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 


டிசம்பர் மாத அமர்வு


2023ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் மாத அமர்வுக்கான தேசியத் தகுதித் தேர்வு டிசம்பர் 6 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது.


விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?


பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.1,150 தொகையைக் கட்டணமாகச் செலுத்தினர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், ஓபிசி க்ரீமி லேயர் அல்லாதோர் 60 ரூபாயைச் செலுத்தினர். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி / மூன்றாம் பாலின மாணவர்கள் ரூ.325 கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது என்று என்டிஏ தெரிவித்திருந்தது. 


இதற்கான தற்காலிக விடைத் தாள் இன்று (ஜனவரி 4ஆம் தேதி) வெளியாகி உள்ளது. தேர்வர்கள், https://ugcnet.ntaonline.in/frontend/web/answer-key-challenge/login-answer என்ற இணைப்பை க்ளிக் செய்து, விடைத்தாளில் முரண்கள் இருந்தால் ஆட்சேபிக்கலாம். இதற்கு நாளை (ஜனவரி 5) இரவு 11.50 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தையும் ஜனவரி 5 இரவு 11.50 மணி வரை செலுத்தலாம்.


விடைத் தாளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது எப்படி?


* தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/frontend/web/answer-key-challenge/login-answer என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


* விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.


* உள்ளிட்டால் விடைத்தாள் தோன்றும். அதில் குறிப்பிட்டுள்ள விடைகளில் முரண் இருக்கும் விடைகளை ஆட்சேபிக்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  


கூடுதல் தகவல்களுக்கு: https://ugcnet.nta.ac.in/