யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக வெளியிட்ட 2026ஆம் ஆண்டிற்கான புதிய விதிமுறைகள் (2026 UGC regulation) நாடு முழுவதும் கடும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளன. குறிப்பாக, இந்த விதிகள் பொதுப்பிரிவு (General Category) மாணவர்களுக்கு எதிராக, ஒரு சார்பாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Continues below advertisement

சர்ச்சை என்ன?

யுஜிசி கடந்த ஜனவரி 13ஆம் தேதி அன்று, சாதிப் பாகுபாடு குறித்த ஒரு ரெகுலேஷனை வெளியிட்டது. அதில், சாதி, பிறப்பு, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று கூறப்பட்டது. உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

எனினும் சாதிப் பாகுபாடு என்பதற்கு அளித்துள்ள விளக்கத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் 2025ஆம் ஆண்டு வரைவு விதிகளில் இருந்த "பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீதான அபராத நடவடிக்கை" குறித்த அம்சம், இறுதி விதிகளில் நீக்கப்பட்டுள்ளது என்றும் புகார் எழுந்துள்ளது. இது பொதுப்பிரிவு மாணவர்கள் மீது தவறான புகார்கள் அளிக்க வழிவகுக்கும் என்றும், அவர்கள் தங்களைப் தற்காத்துக்கொள்ள வழியில்லாமல் போகும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Continues below advertisement

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றப் படியேறியுள்ளது. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மிருத்யுஞ்சய் திவாரி என்பவர், இந்த விதிகளை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழும் விவாதங்கள்

இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, "சட்டம் அனைவருக்கும் சமமான பாதுகாப்பை அளிக்க வேண்டும். பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டால் அதைக் கையாள்வது எப்படி? இந்த விதிகள் பாரபட்சமாக உள்ளன" எனச் சாடியுள்ளார். உ.பி. பாஜக எம்எல்சி தேவேந்திர பிரதாப் சிங் மற்றும் குமாவோன் பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆகியோர் கூறும்போது, "இது மாணவர்களிடையே அச்சத்தையும், தேவையற்ற பிரிவினையையும் உருவாக்கும்" எனத் தெரிவித்துள்ளனர்.

பாஜக விளக்கம்

எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, "மோடி அரசு இருக்கும் வரை உயர் சாதியினரின் குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்த்தப்பட்ட வகுப்பினருக்கு (EWS) இடஒதுக்கீடு வழங்கியதே இந்த அரசுதான். அனைத்துக் குழப்பங்களும் விரைவில் தீர்க்கப்படும்" என்று சமாதானம் கூறியுள்ளார்.

ஒருபுறம் பொதுப்பிரிவினர் இதை எதிர்க்க, மறுபுறம் சில சமூகச் செயற்பாட்டாளர்கள், "இந்த விதிகள் ஒடுக்கப்பட்ட மாணவர்களைப் பாதுகாக்கப் போதுமானதாக இல்லை" என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக https://www.ugc.gov.in/pdfnews/1881254_UGC-Promotion-of-Equity-in-HEIs-Regulations-2026.pdf என்ற இணைப்பில் யுஜிசி விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.