எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.  ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த முறை இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. விண்ணப்பிக்காத தேர்வர்களுக்கு 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் நீட் தேர்வு விண்ணப்பங்களில் ஜூன் 16 வரை திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 


இந்நிலையில் இன்று நடைபெறும் நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.



  • நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. ஆகவே மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குள் வந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  • ஆடை கட்டுப்பாடுகள்

    • நீண்ட கைகளுடன் (புல் ஹேண்ட்) கூடிய லேசான ஆடைகள் அணிந்து கொண்டு மாணவர்கள் தேர்வு எழுத கூடாது.

    • ஹீல்ஸ் இல்லாத செருப்புகள் மற்றும் பிற செருப்புகள் அனுமதிக்கப்படும். ஷூ அணிந்து தேர்வு எழுத அனுமதியில்லை.

    •  பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

    • வாட்ச்கள், வளையல், கேமரா, ஆபரணங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் அணிந்து கொள்ள அனுமதியில்லை.



  • தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள்:

    • மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள், கால்குலேட்டர்கள் போன்ற சாதனங்களை மாணவர்கள் எடுத்து செல்லக் கூடாது.



  • மாணவர்கள் எடுத்து செல்ல வேண்டியவை:

    • மாணவர்கள் ஹால்டிக்கெட்டை எடுத்து செல்ல வேண்டும்.

    • சுய உறுதிமொழி சான்றிதழ் ஒன்றையும் எடுத்து செல்ல வேண்டும்.

    • கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நிச்சயம் என்.95 அல்லது பிற மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

    • தபால் கார்டு அளவில் ஒரு புகைப்படம்.

    • சானிடைசர்

    • தண்ணீர் பாட்டீல்




இளங்கலை நீட் தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 18,72,329 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். 8,07,711 ஆண் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல பெண் தேர்வர்கள் 10,64,606 பேர் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்துள்ளனர். 





கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2,57,562 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழில் தேர்வெழுத 31,803 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.