இந்தியாவில் உள்ள‌ மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட்‌ தேர்வு சமீபத்தில் நடைப்பெற்று முடிந்து அதன் தேர்வு முடிவுகளும் வெளியாகின. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களில் 2022 - 23ம் கல்வியாண்டில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டிருந்தன.

 

இதனை தொடர்ந்து 12ம் வகுப்பில் தேர்சி பெற்று விட்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 10 நாட்களாக இணைய வழியில் விண்ணப்பித்து வந்தனர். மேலும், சிறப்பு பிரிவில் 7.5% இட ஒதுக்கீடு பெறவுள்ள மாணவர்களுக்கு நேரடியாகவும், பொது பிரிவினருக்கு ஆன்லைனிலும் கவுன்சிலிங் நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 50 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடும். மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திலும் tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில் மருத்து படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

 

அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 569 மாணவர்கள் மருத்துவம் படிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 7.5% ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், அதற்கான உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்து விண்ணப்பிப்பது அவசியமாகும். மேலும் இன்றோடு விண்ணப்பிப்பதற்கான தேதி முடியவுள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விரைந்து விண்ணப்பிக்குமாறும் மருத்துவ கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது.