செட் எனப்படும் மாநிலத் தகுதித் தேர்வுக்கான பழைய உத்தேச விடைக் குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம், திடீரெனத் திரும்பப் பெற்றுள்ளது. மீண்டும் புதிய விடைக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி உள்ளதாவது:


''ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ UGC வழிகாட்டு நெறிமுறைகளின்‌ அடிப்படையில்‌, மாநில தகுதித்‌ தேர்வு (TNSET) கணினி வழி தேர்வுகள்‌ (CBT), மார்ச்‌ 6 முதல்‌ 9 வரை (2025) நடத்தி முடிக்கப்பட்டு, உத்தேச விடைக்குறிப்பு 13 மார்ச்‌ 2025 அன்று வெளியிடப்பட்டு, தேர்வர்கள்‌ இணைய வழியில்‌ ஆட்‌ சேபணை செய்ய வழிமுறைகள்‌ ஏற்படுத்தப்பட்டது.


தொழில்‌நுட்பப் பிழை காரணமாக திரும்பப்‌ பெறப்படும் உத்தேச விடைக் குறிப்புகள்‌


தேர்வர்களிடமிருந்து பல்வேறு வழிகளில்‌ பெறப்பட்ட கோரிக்கைகளை குழுக்கள்‌ ஏற்படுத்தி பரிசீலனை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்‌ தொழில்‌நுட்பப் பிழை காரணமாக (Technical Errors) வெளியிடப்பட்ட உத்தேச விடைக் குறிப்புகள்‌ திரும்பப்‌ பெறப்படுகிறது.


எனவே, தற்போது மீண்டும்‌ உத்தேச விடைக்‌ குறிப்புகள்‌ மற்றும்‌ தேர்வர்களின்‌ Response Sheet-ம்‌ வெளியிடப்படுகிறது. தேர்வர்கள்‌ அவர்களின்‌ Response Sheet- இணைய தளத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பதிவிறக்கம்‌ செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


தேர்வர்கள்‌ தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தேச விடைக்குறிப்புகள்‌ மற்றும்‌ தேர்வர்களின்‌ Response Sheet-ன்‌ அடிப்படையில்‌ ஏதேனும்‌ ஆட்சேபணை தெரிவிக்க விரும்பினால்‌ இணையவழி மூலமாக மட்டுமே ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும்‌ . ஆட்‌ சேபணைகளை 27.03.2025 பிற்பகல்‌ 6.00 மணி வரை தெரிவிக்கலாம்‌. மேலும்‌, பாட வல்லுநர்களின்‌ முடிவே இறுதியானது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


தேர்வர்கள் அதிர்ச்சி


ஏற்கெனவே வெளியிட்ட விடைக் குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், திரும்பப் பெற்றது தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


முன்னதாக மாநிலத் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு 2024ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பலகட்ட தாமதத்துக்குப் பிறகு, தேர்வு 2025ஆம் ஆண்டு மார்ச் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.