படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்குதல் குறித்து போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அம்மையத்தின் பயிற்சித் துறை தலைவர் கூறி உள்ளதாவது:
TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில்கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
6 மாத கால பயிற்சி
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை, நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 04.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 16.05.2025 முதல் 31.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
முன்னதாக https://admission.cecc.in/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இன வாரியான இடங்களுக்கு ஏற்பத் தேர்வர்கள் தெரிவு செய்யப்படுவர். பின்பு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களைப் பெற: www.cecc.in