டிஎன்பிஎஸ்சி குரூப் 4-க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது . இதனால் குரூப் 4-க்காண காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது. 


இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வெளியாகி இருந்தால் அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தேர்வு முடிவுகள் தாமதமாகின.


2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 8 மாதங்கள் கழித்து மார்ச் 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. எனினும் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை. 


கொரோனா காலத்தில் தாமதமாக தேர்வு நடைபெற்றதால், காலிப் பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வருக்குக் கோரிக்கை மனுவையும் அனுப்பினர். 


இந்த நிலையில், அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதால் குரூப் 4-க்காண காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது:


’’2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் குரூப் 4 காலிப் பணி இடங்களுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியாகின. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.


இந்நிலையில்,டிஎன்பிஎஸ்சி குரூப் 4-க்கான காலிப் பணியிடங்கள் தற்போது 25 ஆயிரமாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022-ம் ஆண்டு குரூப் 4-க்காக நடைபெற்ற  டிஎன்பிஎஸ்சி தேர்வில் இருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20,000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.


டிஎன்பிஎஸ்சி குரூப் 4-க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள். ஆகவே விரைந்து குரூப் 4-க்காண காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்’’.


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.