டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், காலிப் பணியிடங்கள் குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அரசின்‌ நலத்திட்ட உதவிகளை மக்களிடம்‌ எடுத்துச்‌ செல்வதிலும்‌, அரசால்‌தீட்டப்படும்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்துவதிலும்‌, அரசின்‌ வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கும்‌ பொதுச்‌ சேவையை நடைமுறைப்படுத்துவதிலும்‌ அடித்தளமாக விளங்குபவர்கள்‌ அரசு ஊழியர்கள்‌. குறிப்பாக அமைச்சுப்‌ பணியாளர்கள்தான்‌ அரசுத்‌ துறைகளின்‌ அடித்தளம்‌. அரசு ஊழியர்கள்‌ இருந்தால்தான்‌ மக்களின்‌ திட்டங்கள்‌ விரைவில்‌ மக்களை சென்றடையும்‌. ஆனால்‌, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும்‌ மேலான தி.மு.க. ஆட்சியில்‌ அரசு ஊழியர்களின்‌ எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து கொண்டு இருக்கிறது.


2021-ஆம்‌ ஆண்டு தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையிலேயே மூன்றரை இலட்சம்‌ காலிப்‌ பணியிடங்கள்‌ என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில்‌, இன்று ஐந்து இலட்சமாக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில்‌, அரசு ஊழியர்களின்‌ எண்ணிக்கை பாதிக்கும்‌ குறைவாக உள்ளது. இதன்‌ காரணமாக மக்கள்‌ பெருமளவுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள்‌.


அரசுத்‌ துறைகளில்‌ உள்ள காலிப்‌ பணியிடங்கள்‌ ஆண்டிற்கு 70,000 என்ற வீதத்தில்‌ நிரப்பப்பட வேண்டுமென்று நான்‌ ஏற்கெனவே எனது அறிக்கைகள்‌ வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தேன்‌. முதலமைச்சர்‌கூட 55,000 காலிப்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படும்‌ என்று சில மாதங்களுக்கு முன்‌ அறிவித்திருந்தார்‌. ஆனால்‌, இன்று குரூப்‌-4 பணியிடங்களுக்கான அறிவிக்கையில்‌ வெறும்‌ 6,244 இடங்கள்‌ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பது இளைஞர்களை பேரதிர்ச்சியில்‌ ஆழ்த்தியுள்ளது.


தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள்‌ கடந்து இருக்கின்ற நிலையில்‌, ஒரே ஒரு முறைதான்‌ கிட்டத்தட்ட பத்தாயிரம்‌ குரூப்‌-4 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள்‌ வெளியிடப்பட்டு இருக்கின்றன.


இவர்கள்கூட பணியில்‌ முழுமையாக சேர்ந்ததாக தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப்‌ பிறகு வெறும்‌ 6,244 குரூப்‌-4 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளிவந்திருக்கிறது. இலட்சக்கணக்கான காலிப்‌ பணியிடங்கள்‌ இருக்கின்ற நிலையில்‌, 10 விழுக்காட்டிற்கும்‌ குறைவான காலிப்‌ பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப்‌ பொறி போடுவது போல்‌ அமைந்துள்ளது. தி.மு.க. அரசின்‌ இந்த அறிவிப்பு மூலம்‌ அரசுப்‌ பணிகள்‌ வெகுவாக பாதிப்படையும்‌ என்பதோடு, இளைஞர்களின்‌ எதிர்காலமும்‌ பாதிக்கப்படுகிறது. காலிப்‌ பணியிடங்களின்‌ எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நிலையில்‌, குறைவான எண்ணிக்கையில்‌ தேர்வு அறிவிப்புகளை வெளியிடுவது, ஒப்பந்த அடிப்படையில்‌ ஆட்களை நியமித்து செலவை மிச்சப்படுத்த தி.மு.க. அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம்‌ இளைஞர்கள்‌ மத்தியில்‌ எழுந்துள்ளது.


இளைஞர்களின்‌ எதிர்காலம்‌ மற்றும்‌ சமூகநீதியினைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, அரசின்‌ நலத்‌ திட்டங்கள்‌ மக்களை உடனடியாக சென்றடைய வேண்டும்‌ என்பதைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, அரசுத்‌ துறைகளில்‌ உள்ள காலிப்‌ பணியிடங்களின்‌ எண்ணிக்கையைக்‌ கணக்கில்‌ கொண்டு அதற்கேற்ப காலிப்‌ பணியிடங்களை நிரப்பவும்‌, இந்த ஆண்டு குறைந்தபட்சம்‌ ஒரு இலட்சம்‌ குரூப்‌-4 காலிப்‌பணியிடங்களையாவது நிரப்பவும்‌ முதலமைச்சர்‌‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


 முறைகேடுகளின்றி தேர்வு: டிடிவி தினகரன்


அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களை உடனடியாக அதிகரிப்பதோடு, குளறுபடி, முறைகேடுகளின்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது.


2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்விற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வனக்காவலர் பணியிடங்களையும் சேர்த்து 6,244 பணியிடங்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பாணை, தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.


அதே நேரத்தில், முன்னதாக நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஓராண்டுக்கு பின்னர் காலதாமதாக அறிவிக்கப்பட்டதையும், அதில் ஒரே தேர்வு மையத்தில் பயின்ற ஏராளமான தேர்வர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார்களையும் கருத்தில் கொண்டு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்துவதில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் முழு கவனம் செலுத்திட வேண்டும்.


மேலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை நினைவாக்கும் வகையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பாணை வெளியிடுவதோடு, நியாயமான முறையில் தேர்வை நடத்தி உரிய காலத்திற்குள் முடிவுகள் வெளியிடுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செய்ய வேண்டும்’’ என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.