தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கடந்த ஜூன் மாதம் 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ 2,763 தேர்வு மையங்களில் தேர்வர்கள்‌ எழுத உள்ளனர்‌. குரூப் 2 தேர்வில் மொத்தம் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ தேர்வில் மொத்தம் 1820 பணியிடங்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறுகிறது.


பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌ இணை ஒருங்கிணைப்பாளராகவும்‌ செயல்படுவார்கள்‌. தேர்வினை கண்காணிக்கும்‌ பொருட்டு துணை ஆட்சியர்‌ நிலையில்‌ பறக்கும்‌ படை அமைக்கப்பட்டுள்ளது.


மேலும்‌, ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும்‌ ஆய்வு அலுவலர்‌ ஒருவரும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ மூலம்‌ நியமிக்கப்பட்டுள்ளார்‌.


மொத்தமுள்ள 2763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள்‌ மற்றும்‌ கண்காணிப்பாளர்கள்‌ (2௦ தேர்வர்களுக்கு ஒருவர்‌) நியமிக்கப்பட்டுள்ளனர்‌. தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும்‌ செய்யப்பட்டுள்ளன.


தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிப்பு


தேர்வு நடைபெறும்‌ நாளன்று தேர்வின்‌ அனைத்து நடவடிக்கைகளும்‌ Videograph செய்ய உரிய ஏற்பாடுகள்‌ மேற்கொள்ளப்பட்‌டுள்ளன.


விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு மையத்தினை எளிதில்‌ அடைவதற்கு எதுவாக போக்குவரத்து துறையின்‌ மூலம்‌ சிறப்பு பேருந்து வசதிகள்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின்‌ பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து மையத்திற்கும்‌ காவலர்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.


மேலும்‌, தேர்வு நடைபெறும்‌ நாளன்று தடையில்லா மின்சாரம்‌ வழங்குவதற்கு மின்வாரியத்‌ துறைக்கு உரிய அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளான.


விண்ணப்பதாரர்களின்‌ உடல்‌ நலன்‌ கருதி 108 ஆம்புலன்ஸ்‌ உள்ளிட்ட மருத்துவ வசதிகள்‌ வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.


எப்போது செல்ல வேண்டும்?


விண்ணப்பதாரர்கள்‌ நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே செல்ல வேண்டும். 09.00 மணிக்கு மேல்‌ வரும்‌ விண்ணப்பதாரர்கள்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ தேர்வு மையத்தில்‌ நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்‌. மேலும்‌ தேர்வு நேரம்‌ முடியும்‌ வரை தேர்வர்‌ யாரும்‌ தேர்வு அறையை விட்டு வேளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்‌.


தேர்வு தொடங்கும் நேரம்: காலை 9.30 மணி


எதற்கு அனுமதி?


* இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (Hall Ticket) கட்டாயம்‌ தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச்‌ செல்ல வேண்டும்‌. மாறாக வேறெந்த ஆவணமும்‌ அனுமதிக்கப்படாது.


* தேர்வர்‌ தங்களுடைய ஆதார்‌ அட்டை, கடவுச்சீட்டு (PASSPORT) , ஓட்டுநர்‌ உரிமம்‌ , நிரந்தர கணக்கு எண்‌ அட்டை, வாக்காளர்‌ அடையாள அட்டை இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர வேண்டும்.



* தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில்‌, தேர்வர்‌ பெயர்‌ உள்ளிட்ட அனைத்து விவரங்களையும்‌ உறுதிப்படுத்திக்‌கொள்ள வேண்டும்‌. அதில்‌ ஏதேனும்‌ முரண்பாடு இருந்தால்‌, உடனடியாக மின்னஞ்சல் (grievance.tnpsc@tn.gov.in) மூலம் தெரிவிக்கலாம்‌.


* தேர்வர்கள்‌ கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்‌ பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌.


எதற்கு அனுமதி இல்லை?


* மின்னணு சாதனங்களான அலைபேசி மற்றும்‌ புத்தகங்கள்‌, குறிப்பேடுகள்‌, கைப்பைகள்‌. மற்ற அனுமதிக்கப்படாத பொருட்கள்‌ போன்றவற்றுடன்‌ தேர்வு அறைக்குள்‌ நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌. எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களைக்‌ கொண்டு வர வேண்டாம்‌ என்று தேர்வர்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


* அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றினை மீறினால்‌ அவர்தம் விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படலாம்‌. அவரது விடைத்தாள்‌ செல்லாதது ஆக்கப்படலாம்‌ அல்லது தேர்வாணையத்தால்‌ விதிக்கப்படும்‌ வேறு ஏதேனும்‌ அபாரதத்திற்கும்‌ உள்ளாக நேரிடும்‌.


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/