TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி  குரூப் 1, 2, 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2 ஏ, 4 ஆகிய தேர்வுகளுக்கு டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில் கட்டணம் இல்லாமல் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது.

Continues below advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2 ஏ மற்றும் 4 தேர்வுகளுக்கு அடிப்படை பயிற்சி வகுப்புகள், கட்டணம் இல்லாமல் இன்று (அக்டோபர் 12ஆம் தேதி) தொடங்குகின்றன என்று டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து அந்த மையம் தெரிவித்து உள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட அறிவிக்கையில் உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2 ஏ, 4 ஆகிய தேர்வுகளுக்கு  டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில் கட்டணம் இல்லாமல் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய பயிற்சியை குழு  விவாதத்துடன் அளிக்க உள்ளோம். 

சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 1, மற்றும் 2, 2A முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கு தனி வகுப்புகள் நடந்து வருகின்றன. புதிதாக டிஎன்பிஎஸ்சி ‌போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெற விரும்பும்  மாணவர்களுக்கு  இந்தப் பயிற்சி  வகுப்புகள்  வெற்றிக்கு பெரிதும் பயன்படுவதாக அமையும்.

1300+ மாணவர்களுக்கு அரசுப்பணி

மாணவர்கள் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு வழிகாட்டியாக பொதுத் துறையில் உள்ள இன்ஷூரன்ஸ் துறை அலுவலர்களை உள்ளடக்கிய அகில இந்திய இன்ஷூரன்ஸ் ஊழியர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் வகுப்புகளை நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசு பணியில் இணைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பில் வெளிவரவுள்ள காலிப்  பணியிடங்களுக்கு மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் வகுப்பானது உடனடியாக தொடங்கப்பட உள்ளது. இந்த மையத்தின்  கலந்துரையாடல் வகையிலான வகுப்பானது (TEST WITH DISCUSSION METHOD), மாணவர்களின் திறமைகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எல்லாத் தகவல்களும் குழு விவாதத்திலேயே கிடைத்து விடும் வகையில் அமைந்துள்ளது. மேலும் அவ்வப்போது துறைசார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளும் மாணவர்களிடையே பகிரப்படுகிறது.

வார இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி எங்கே?

சென்னை- 1 பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து(கச்சாலீஸ்வரர் ஆலயம்) அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி கல்வி மையத்தில் இன்று ( சனிக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கி உள்ளன.

ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்பு நடைபெறும்.  தேர்வெழுத முழுத் தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், மற்றும் குடியிருப்பு முகவரிக்கான ஆதார நகலுடன்  வர வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களை, 63698 74318, 97906 10961, 94446 41712  எண்களில் தொடர்பு கொண்டும் பெறலாம்.

சமூக ஆர்வத்துடன் போட்டித் தேர்விற்கான பாடத் திட்டங்களை  வகுப்பெடுக்கத் திறன் வாய்ந்த  ஆசிரியர்கள் முன் வந்தால்  அவர்களையும் வரவேற்கிறோம் என்று டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola