குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழிலும் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் 16 குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19-ஆம் தேதி குழந்தை பாதுகாப்பு அலுவர் பணிக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.


இதற்கான முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்க கடந்த ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 


தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியைப் புறக்கணித்துவிட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, ''குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் தான் பங்கேற்க இயலும் என்றும், இரு தாள்களாக நடத்தப்படவிருக்கும் இந்தத் தேர்வுகளின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாகும். மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துப் போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகள் தமிழ் மொழியில் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அதற்கு முன்பாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இத்தகைய சூழலில் ஆங்கிலத்தில் மட்டும்தான் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருப்பது சமூக அநீதி ஆகும்.


தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ். தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணிகளில் நுழைந்து விடுவதை தடுக்க அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான போட்டித் தேர்வின் இரண்டாம் தாளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டப் படிப்புகள் தமிழ் வழியிலும் நடத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு போட்டித் தேர்வின் முதல் தாளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.


அதுமட்டுமின்றி, குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய 5 பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.  


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வு தமிழிலும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.