பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் வெளியிட்டார். 


2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு ஆக.20ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். 


பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூலை 19 ஆக இருந்தது. எனினும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதமாகின. இதனால், விண்ணப்பிக்கக் கடைசித் தேதி கால அவகாசம் இல்லாமல் நீட்டிக்கப்பட்டது. 


இதற்கிடையே ஜூலை 22ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் இருந்து 5 நாட்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 27 வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.









சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறை


இதற்கிடையே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கலந்தாய்வுத் தேதிகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி டிஎஃப்சி மையங்களில் தொடங்கியது. 


முதற்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் 2,442 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடங்கியது. இந்தப் பணி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக மாணவர்கள் யாரும் டிஎஃப்சி மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. சரிபார்ப்பு நிலை குறித்து தங்களுக்கு உள்ள லாகின் ஐடியில் சென்று சரிபார்க்கலாம். ஒவ்வொருக்கும் தனித்தனியாக செய்திகள் அனுப்பப்பட்டன. 


சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில், தரவரிசை பட்டியலும் வெளியாகி உள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




1,58,157 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு


முன்னதாக 2,11,905 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முன்பதிவு செய்திருந்தனர். அதில், 1,69,080 பேர் பதிவுக் கட்டணம் செலுத்திய நிலையில், அவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. 


இதில் 1,58,157 மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாகக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 10,923 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 


அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு தனியாக 2 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 22,587 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 431 கல்லூரிகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன. இந்த ஆண்டு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,48, 811 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


சரிபார்ப்பது எப்படி?


மாணவர்கள் http://tneaonline.org/ என்ற இணையப் பக்கத்தின்மூலம் தரவரிசைப் பட்டியலைத் தெரிந்துகொள்ளலாம்.


பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்து முழுமையாக அறிய: https://static.tneaonline.org/docs/Academic_Rank.pdf?t=1660629396774


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண