இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்படும் என்பதற்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
காலிப் பணியிடங்களை அதிகரிக்கக் கோரிக்கை
கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறாத சூழலில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், 2023- 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது.
2,768 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு
பிறகு இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இந்த அறிவிப்பு ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்மூலம் 2,768 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆயிரம் பணி இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
விடைத் தாள்கள் திருத்தப்படவில்லையா?
எனினும் 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும், இன்று வரை விடைத் தாள்கள் திருத்தப்படவில்லை என்றே தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஓர் ஆசிரியர்கூடத் தேர்வு செய்யப்படவில்லை என்று புகார்க் குரல்கள் எழுந்துள்ளன.
அதேபோல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்ய நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை என்றும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
தேர்வர்கள் https://trb.tn.gov.in/admin/pdf/6287721465website%20copy.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு அட்டவணையைக் காணலாம்.
இதையும் வாசிக்கலாம்: TRB Annual Planner 2025: அரசு துறைகளில் 7535 பணியிடங்கள்; என்னென்ன தேர்வு? எப்போது? டிஆர்பி அசத்தல் அறிவிப்பு