2025ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பிளஸ் 1 அரியர் (மார்ச் 2025 பருவத்திற்கு முந்தைய பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்) துணைத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, தேர்வு முடிவுகள் தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் பட்டியலை (Statement Of Marks) மாணவர்கள் தற்போது https://www.dge.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் பெறலாம்.
துணைத் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
- தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் செல்லவும்.
- அதில், ரிசல்ட் என்ற வாசகத்தை கிளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும்.
- அதில், HSE Second Year Supplementary Exam, Jun / Jul 2025 - Result -Statement Of Marks Download’ என்ற வாசகத்தை க்ளிக் செய்யவும்.
- அதில், தங்களின் தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக, தேவைப்படும் மாணவர்கள் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, 28.07.2025 ( திங்கட்கிழமை) மற்றும் 29.07.2025 (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று, விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் எவ்வளவு?
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275,/- கட்டணத்தை பணமாக செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.)
தேர்வர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1753438438.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, இதற்கான விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதில் இருந்து மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். எனினும் இதற்கான தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்னும் அறிவிக்கவில்லை.