பிளஸ் 2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளின் மறு கூட்டல் மறு மதிப்பீடு முடிவுகள் நாளை (ஜூன் 23) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘’நடைபெற்று முடிந்த மார்ச் 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re- total)) மற்றும் மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification) பகுதியில் 23.06.2025 (திங்கட் கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.
விடைத் தாள்களில் மதிப்பெண் மாற்றம் இல்லை
இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மறு கூட்டல் , மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது?
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/