மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளியான நிலையில், விடைத்தாள் நகல் நேற்று (ஜூன் 4) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட்டது. ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் விடைத் தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தனர்.
தொடர்ந்து பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இன்றில் இருந்து மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் ‘Application for Retotalling / Revaluation” என்ற தலைப்பை க்ளிக் செய்ய வேண்டும். அதில் தோன்றும் வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அல்லது https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1748949202.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். இதன்மூலம் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மறு மதிப்பீட்டுக்கு https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1748949280.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து இன்று (05.06.2025) முதல் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 07.06.2025 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
கட்டணத்தைச் செலுத்துவது எப்படி?
மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
இந்த மாவட்டங்களுக்கு மட்டும் முக்கிய மாற்றம்
தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.
மறு மதிப்பீடு
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505.
மறுகூ ட்டல்
உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/- என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.