2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு விடைத் தாள்களின்‌ நகலினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் இதனை இணையதளத்தில்‌ இன்று (ஜூன் 13) முதல் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம். அதேபோல, ஜூன் 16ஆம் தேதி முதல் மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகலைப் பெறுவது எப்படி?

  • மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரிக்குச்‌ செல்ல வேண்டும்.
  • அதில், Notification-ஐ க்ளிக் செய்தவுடன்‌ "SSLC, March/April 2025 - Scripts Download" என்ற வாசகம் தோன்றும்.
  • அதை Click செய்தால்‌ இன்னொரு பக்கம் தோன்றும்.
  • அதில்‌ தங்களது பதிவெண் மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின்‌ நகலினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மறு கூட்டல்‌, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • விடைத்தாட்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறு கூட்டல்‌ அல்லது மறு மதிப்பீட்டிற்கு சில தேர்வர்கள் விண்ணப்பிக்க விரும்பலாம்.
  • அந்த தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 
  • அதில், "Application for Retotalling/ Revaluation" என்ற தலைப்பினை க்ளிக் செய்ய வேண்டும். 
  • அதில் தோன்றும் வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.

ஜூன் 16 முதல்

தேர்வர்கள்‌ இந்த விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள்‌ எடுத்து 16.06.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல்‌ 18.06.2025 (புதன்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌ என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.