2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் அதாவது மே 16ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதேபோல 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளும் அதே நாள் பிற்பகலில் வெளியிடப்பட உள்ளன.
பிளஸ் 2 முடிவுகள் முன்கூட்டியே வெளியான நிலையில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியிடப்பட உள்ளன.
முன்கூட்டியே வெளியாகும் பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் முடிந்தன. தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெளியாகும் என்றும் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.
எனினும் தொடர்ந்து 1 நாள் முன்கூட்டியே பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 8ஆம் தேதி அன்று வெளியாகின. அதேபோல 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளும் 3 நாள் முன்கூட்டியே வெளியாக உள்ளன. அதாவது 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியாக காலை 9 மணிக்கு உள்ளன. அதேபோல 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 16 பிற்பகல் 2 மணிக்கு வெளியாக உள்ளன.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
https://results.digilocker.gov.in
மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். எனினும் இதற்கு தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்ய வேண்டியது அவசியம்.
மேலும் results.digilocker.gov.in என்ற மத்திய அரசின் இணையதளம் மூலமாகவும் தேர்வர்கள் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
அதேபோல மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் அறிந்துகொள்ளலலாம்.
எஸ்எம்எஸ் மூலமாக காணலாம்
மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
கடந்த ஆண்டு நூலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று தேர்வு முடிவுகளை அறியும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தேர்ச்சி எப்படி?
முன்னதாக மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 91.55% பேர் தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.