2020 யுபிஎஸ்சி தேர்வின் இறுதி முடிவுகளை அறிவித்தது, அந்த முடிவுகளில் ஐபிஎஸ் அதிகாரி டினா தாபியின் தங்கை ரியா தாபி, 15 வது இடத்தைப் பிடித்தார். ரியா தனது சமூக ஊடக பக்கத்தில் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'பெற்றோரை மகிழ்விப்பதை விட சிறந்தது இல்லை' என்று எழுதியுள்ளார். ரியா டாபியின் மூத்த சகோதரி டினா டாபி 2015 ஆம் ஆண்டின் யுபிஎஸ்சி தேர்வுகளில் முதலிடம் பிடித்து இருந்தார். "என் தங்கை ரியா டாபி யுபிஎஸ்சி 2020 தேர்வில் 15 வது ரேங்க் பெற்றுள்ளதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." என்று ஐஏஎஸ் அதிகாரி டினா தாபி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சகோதரிகள் இருவரும் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேசி ஸ்ரீ ராம் கல்லூரியில் படித்தவர்கள். தான் 15 வது இடம் பிடித்ததற்கு தனது பெற்றோர்கள் மற்றும் சகோதரியின் ஆதரவில் தான் சாத்தியமானது என்று ரியா தாபி செய்தியாளர்களிடம் கூறினார். "மிக்க மகிழ்ச்சி, கடைசியாக, அனைத்து அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி!" என்று இன்ஸ்டாகிராமில் ரியா டாபி எழுதியிருந்தார். ரியா தாபிக்கு தற்போது 23 வயதே ஆகிறது.



தான் தேர்விற்கு தயாரானது குறித்து பகிர்ந்துகொண்ட ரியா டாபி, லேசி ஸ்ரீராமில் பட்டம் பெற்ற பிறகு விரைவில் தயார் செய்யத் தொடங்கினாராம். யுபிஎஸ்சிக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் படிப்பாராம். 15 வது இடம் பிடித்த பிறகு பிறகு அவர் அளித்த பல நேர்காணல்களில், ரியா டாபி தனது சகோதரியின் 2015 முதல் மதிப்பெண் தன்னை மன அழுத்தத்தில் ஆழ்த்தியதாக கூறினார். ஆனால் அது அழுத்தத்தை விட அதிகம் உத்வேகத்தை கொடுத்தது என்று அவர் கூறினார். குடும்பத்திலிருந்து எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை, என்றார்.



யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்ற முதல் தலித் டினா டாபி ஆவார், அவர் ஒரு புகழ்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாக ஆனதற்கு இதுவே முதல் காரணம். மற்றொரு ஐஏஎஸ் டாப்பரான அதர் அகமதுவுடனான அவரது திருமணம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகப் பாராட்டப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டு அதில் 4,82,770 பேர் தேர்வு எழுதினார். மொத்தம் 10,564 விண்ணப்பதாரர்கள் ஜனவரி மாதம் நடந்த முக்கிய தேர்வுக்கு தகுதி பெற்றனர். அவர்களில், 2,053 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அமர்ந்தனர். அதிலிருந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.