10 லட்சரூபாய்க்கு நீட்வினாத்தாள்கசிந்துள்ளதாகக் கூறப்படுவது மிகப்பெரிய மோசடிஎன்று ஐஐடிஇயக்குநர்காமகோடிதெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த சர்ச்சை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், "உண்மையில் வினாத்தாள் கசியவில்லை, அப்பாவி பெற்றோர்களைக் குறிவைத்து நடக்கும் மாபெரும் மோசடி இது" என ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், பேராசிரியர் காமகோடி, நீட் தேர்வில் நாடு தழுவிய அளவில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்தவொரு தரவு ஆதாரமும் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: ’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
10 லட்ச ரூபாய் வரை டீல்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே, சில இடைத்தரகர்கள் மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்புகொள்கின்றனர். 'எங்களிடம் நீட் வினாத்தாள் இருக்கிறது, 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் வரை கொடுத்தால் அதைத் தருகிறோம்' என வலை விரிக்கின்றனர். 10 லட்ச ரூபாய் வரை இந்த டீல் பேசப்படுகிறது.
பதற்றத்தில் இருக்கும் பெற்றோர்களும் அதை நம்பி பணத்தைக் கொடுத்து விடுகின்றனர். ஆனால், உண்மையில் அந்த கும்பலிடம் எந்த வினாத்தாளும் இருப்பதில்லை. ஏதோ ஒரு போலியான வினாத்தாளை நம்பிக் கொடுத்து விடுகிறார்கள்.
சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவு
பணம் கொடுத்த மாணவர் தனது சொந்த உழைப்பால் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், 'நாங்கள் கொடுத்த வினாத் தாளால்தான் உங்கள் பிள்ளை பாஸ் ஆனார்' என அந்த கும்பல் உரிமை கொண்டாடுகிறது. ஒருவேளை மாணவர் தேர்வில் தோல்வியடைந்தால், பணத்தை வாங்கிய இடைத்தரகர்கள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விடுகிறார்கள். இதுதான் களத்தில் நடக்கும் உண்மையான மோசடி," என அவர் தெரிவித்தார்.
மேலும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு, ஐஸர் தேர்வுக்கும் இப்படிதான் மோசடி செய்யப்பட்டதாகவும் குறுக்கு வழியில் செல்வதாக நினைத்து, போலியான வாக்குறுதிகளை நம்பி பெற்றோர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பான லட்சக்கணக்கான ரூபாயை இதுபோன்ற மோசடி கும்பலிடம் இழக்க வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புகார் எண் வெளியீடு
இதுதொடர்பான முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க 1930 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
