தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பில் சேர்ந்த தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கையை விட இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
முதல் வகுப்பில், தமிழ் வழியில் சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர்?
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பில், தமிழ் வழியில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உண்மை சரிபார்ப்பகம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ’’தனியார் நாளிதழ் ஒன்றின் மாநாட்டில் குருமூர்த்தி பேசுகிறார்.
பகிர்ந்தது தவறான தகவல்!
''தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பில் சேர்ந்த தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கையை விட இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்'' என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசுகிறார். இவ்வாறு பகிர்ந்தது தவறான தகவல்!
தமிழ்நாட்டில் 2025- 2026ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2,14,769 பேர், 70,000 அல்ல.
இரு தரப்பினரும் ஒரே வயதில் இருப்பதில்லை
மேலும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையையும் இந்தி பிரச்சார சபாவில் சேரும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிடுவது தவறானது. ஏனெனில் இரு தரப்பினரும் ஒரே வயதில் இருப்பதில்லை.
இது முற்றிலும் தவறான தகவல், தவறான ஒப்பீடு!’’ என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.