கல்வி என்பதுதான் எப்போதும், எதனாலும் அழியாத சொத்து. இதனால்தால் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கற்றலால் படைப்பாற்றல் உண்டாகும். படைப்பாற்றலால் சிந்தனைத் திறன் வளரும். சிந்தனைத் திறன் அறிவைப் பெருக்கும். அறிவு சுடர் விட்டால் பொருளாதாரம் செழிக்கும் என்று தான் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதை மெய்ப்பிக்கும் வகையில் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தங்களின் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுத் தந்து பெற்றோர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் (நீலகிரி) மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அரசு பள்ளியா இது என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு பெற்றோர்கள் தேடி வந்து இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். தஞ்சை ஹர்பனில் அதிக மாணவர்கள் கல்விப்பயிலும் தொடக்கப்பள்ளியாக இது உள்ளது என்றால் இதன் பெருமையை பார்த்துக் கொள்ளுங்கள்.
பள்ளி தலைமை ஆசிரியை கீதா தங்கள் மாணவ, மாணவிகளின் கல்வித்திறன் பற்றி கூறுகையில், இரண்டாவது தலைமுறை மாணவ, மாணவிகள் இங்கு கல்விப்பயில்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் 70 சதவீதம் பேர் இங்கு பயின்றவர்களின் குழந்தைகள்தான். முக்கியமாக ஆசிரியை அலமேலு மங்கை பற்றி கூறவேண்டும். இவரிடம் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் தங்களின் குழந்தைகள் இங்குதான் கல்வி கற்க வேண்டும் என்று அழைத்து வந்து சேர்க்கின்றனர். இப்பள்ளிக்கு நான் வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் 102 பேர் படித்து வந்தனர். இப்போது 489 பேர் படிக்கின்றனர். தஞ்சை ஹர்பனில் அதிக மாணவ, மாணவிகள் படிக்கும் தொடக்கப்பள்ளியாக இப்பள்ளி விளங்குகிறது. ஆசிரியை அலுமேலுமங்கைக்கு பதவி உயர்வு மற்றும் தலைமை ஆசிரியையாகும் வாய்ப்பு வந்தும் அதை மறுத்து இப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பலவகையிலும் உழைத்து வருகிறார். அதேபோல்தான் ஆசிரியை அமுதா உட்பட இங்கு பணியாற்றும் அனைவரும் சிறப்பாக பணியாற்றுகின்றனர் என்றார். இப்பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியைகள் கடுமையாக உழைக்கின்றனர் என்பது கண்கூடான ஒன்று. ஸ்மார்ட் கிளாஸ், எண்ணும் எழுத்தும் பயிற்சி, எளிய செயல் விளக்கம் என்று சக்கைபோடு போட்டு தனியார் பள்ளிகளுக்கு கொஞ்சம் கூட சளைத்தது அல்ல இப்பள்ளி என்று சாதித்து வருகின்றனர்.