தமிழகத்தில் பள்ளிகளில் புகையிலை இல்லாத கல்வி நிறுவன வழிகாட்டுதல்களை செயல்படுத்த உத்தரவிட கோரிய வழக்கு குறித்து பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் - பள்ளி கல்வித்துறை

அபாயத்தை ஏற்படுத்தும் புகையிலை
 
மதுரையைச் சேர்ந்த மணிபாரதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில்...“குட்கா, பான் பராக், பான் மசாலா போன்ற மெல்லும் புகையிலை வகைகளில் 4,000-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது 40 வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை ஆகும். மெல்லும் புகையிலை பயன்பாடு, பல்வேறு வகையான புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. மெல்லும் மற்றும் நுகரப்படும் புகையிலையில் 'நிக்கோட்டின்' என்ற வேதிப்பொருள் உள்ளது.  இது வாய் அல்லது மூக்கின் திசுக்கள் வழியாக உறிஞ்சப்படுகிறது. இது ​​பக்கவாதம், வாய் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
 
பல் சுகாதாரப் பரிசோதனைகள்
 
தமிழகத்தில் கூல்லிப் மற்றும் புகையில்லா புகையிலைப் பொருட்களின் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் சிறு கடைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஏற்கெனவே பள்ளிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பவர்களை கைது செய்யவும், இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. எனவே, தமிழகத்தில் பள்ளிகளில் புகையிலை இல்லாத கல்வி நிறுவன வழிகாட்டுதல்களை செயல்படுத்தவும், தென் மாவட்டங்களில் குழந்தைகளுக்கு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை தெரிவிக்க குழந்தை புகையிலை தடுப்பு மையம் அமைத்து ஆலோசனை நிபுணர், மருத்துவ பணியாளர் அல்லது குழந்தை உளவியலாளர் நியமிக்கவும், பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் குறைந்தது இரண்டு முறையாவது முறையான  வாய்வழி, பல் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். என கூறியிருந்தார்.
 
பள்ளி கல்வி துறை சார்பில் பதில்மனு தாக்கல்
 
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திக்கேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கல்வித்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பள்ளி கல்வி துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.