பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு `தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு' வினாத்தாள் தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக, தொழில்நுட்பக் கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களின் முதல்வர்களுக்கு இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
கொள்குறி வகை (அப்ஜெக்டிவ் டைப்) வினாக்கள் மூலம் மாணவர்களை பயிற்றுவிப்பது கற்றலின் தரத்தை உயர்த்தும் ஒரு பயனுள்ள முறையாகும்.
எதற்காக கொள்குறி வகை வினாக்கள்?
இது பாடப்பகுதியை எளிதில் புரிந்துகொள்ளவும், முக்கியமான கருத்துகளை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய கேள்விகள் மாணவர்களின் சிந்தனைத் திறன், தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் நேரத்தை சரியாகப் பயன்படுத்தும் வழக்கத்தை வளர்க்கின்றன.
மேலும் உடனடி மதிப்பீட்டின் மூலம் தங்கள் பலவீனங்களையும் வலிமைகளையும் மாணவர்கள் அறிந்து, முன்னேற்றம் அடைய முடிகிறது.
வல்லுநர் குழு மூலம் தயாரிப்பு
எனவே பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான (பாலிடெக்னிக் டிப்ளமா) படிப்பில் முதலாம் ஆண்டு முதல் பருவம் மற்றும் 2-ம் பருவ பாடங்களான தமிழர் மரபு மற்றும் தமிழர் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான கொள்குறி வினாக்களின் தொகுப்பு, உரிய வல்லுநர்கள் குழுவைக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இது தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dte.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்த தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: www.dte.tn.gov.in
https://www.dte.tn.gov.in/index.php/Homepage/all_annocement என்ற இணைப்பில் வினாத்தாள் தொகுப்பை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, பயன் பெறலாம்.