இந்திய ராணுவ அமைச்சகம் மூலம் நடத்தப்படும் இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் அபிரூபன் தேர்ச்சி பெற்றுள்ளார்.


உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் பகுதியில் இந்திய தேசிய ராணுவக் கல்லூரி (ஆர்ஐஎம்சி) உள்ளது. இந்திய ராணுவ அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படும் இக்கல்லூரியில், 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆண், பெண் என இருபாலின மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 8-ம் வகுப்புக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 


ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தலா 25 மாணவர்கள் என 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நுழைவுத் தேர்வில் கணிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக கணக்கு (200 மதிப்பெண்கள்), ஆங்கிலம் (125 மதிப்பெண்கள்) மற்றும் பொது அறிவு (75 மதிப்பெண்கள்) என மூன்று பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் நேர்முகத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மாநிலத் தலைநகரங்களில் மட்டும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், உடல் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம்.


இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இங்கு 8 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வழக்கமான அறிவியல் பாடங்களுடன், அடிப்படை ராணுவப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. பின்னர் பட்ட படிப்பை முடித்து, ராணுவத்தின் உயர் பதவியில் இணையும் வகையில், மாணவர்கள் தயார் செய்யப்படுகின்றனர்.




2022- 23-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முதற்கட்ட நுழைவுத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில், தமிழகத்தில் உள்ள சிவகாசியைச் சேர்ந்த மாணவர் அபிரூபன் அருண் (13 வயது), முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்து வருகிறார். 


கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்தில் இருந்து மாணவர்கள் யாரும் தேர்ச்சி பெறவில்லை. இதனால், தமிழகத்துக்கான ஒரு மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடு, பிற மாநில மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், அபிரூபன் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜனவரி மாதம் 22-ம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளன.


இதுகுறித்து மாணவர் அபிரூபன் கூறுகையில், “அமராவதி நகர் சைனிக் பள்ளியில் படித்துவரும் நான், இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, படிப்பில் கவனம் செலுத்தினேன். கோவை, கணபதி பகுதியில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் நடத்தப்படும் டிஃபன்ஸ் அகாடமியின் பயிற்சி முகாமில் பங்கேற்று நுழைவுத் தேர்வுக்குத் தயாரானேன். 


கடின முயற்சியால், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு நனவாகும் என நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது” என்று தெரிவித்தார்.