பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை நீட்டிப்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


காலாண்டு விடுமுறை எப்போது?


பள்ளி மாணவர்களுக்கு செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறும் 7ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.


5 நாட்கள் மட்டுமா?


இதற்கிடையே தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு எழுதியுள்ள கடிதத்தில், ’’கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்குப் பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால், நடப்பாண்டு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  


விடுமுறையை நீட்டித்தால் ஆசிரியர்களுக்கும் விடைத் தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் கிடைக்கும். எனவே, பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டது.


 


இந்த நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுமுறை நீட்டிப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரிடம் பேசி உள்ளேன்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.