தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாத்தாளும் இன்று முன்கூட்டியே வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பிளஸ் 2 திருப்புதல் தேர்வுக்கான உயிரியல், வணிகவியல், வணிக கணிதம் வெளியான நிலையில் தற்போது இயற்பியல் தேர்வு வினாத்தாளும் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து, பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மதிப்பெண் ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. கட்டாயம் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், அதுவும் பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. 




மேலும், அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு பொது தேர்வு மாணவர்களுக்கு இருக்கிறது. எனவே பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம். மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. வினாத்தாள் லீக் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி திருப்புதல் தேர்வு தொடங்கியது. 10 ஆம் தேதி விடுமுறை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைப்பெற்றது. நேற்று 14 ஆம் தேதி பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வும், பன்னிரண்டாம் வகுப்பு கணினி தேர்வு நடக்க இருந்தது.  இந்நிலையில் இதற்கான வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியாகி விட்டதாக நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் பரவியது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பு எழுந்தது.இதில் சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைதளங்களில் வெளிவந்ததாக செய்தி ஊடங்கள் வழியாக அறியப்பட்டதன் அடிப்படையில், துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை இந்த வினாத்தாள் கசிவதற்கு காரணமாக இருந்த அரசு அலுவலகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே வெளியான தேர்வு அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.  


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண