திருச்சி, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை இயங்கும் குளிர்சாதன பேருந்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது,


“ தமிழ்நாடு முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதைப் போல, பள்ளி ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடத்த வாய்ப்பில்லை. பணி அனுபவ மூப்பு அடிப்படையில் செய்ய வேண்டும் என்று பல ஆசிரியர்கள் நியாயமான காரணங்களோடு என்னை நேரில் சந்தித்து மனு கொடுக்கின்றனர். எனவே, ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.




கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் பணியின்போது உயிரிழந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பள்ளி வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக்கூடாது. அவர்களை பள்ளிக்கு வரவழைப்பதுதான் உங்களது பணி. ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என மாணவர்களை சில பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே ஆசிரியர்களின் கடமை. மாறாக, அவர்களுக்கு எந்த ஒரு பாகுபாடும் பார்ப்பதோ, அவர்களை துன்புறுத்தவோ கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கல்வித் தொலைக்காட்சி எப்போதும் போல தொடர்ந்து இயங்கும். நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அதுதொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.




குழந்தைகளை எந்த விதத்திலும் குழப்பாமல், சட்டப்போராட்டம் ஒரு பக்கமாக இருந்தாலும், அதற்காக யாரும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதற்கென சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யும்.


நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதலைமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்த கட்டாயம் பற்றியும், அவர்களை வரவழைப்பது குறித்தும்தான் விவாதித்தோம். ஆனால், அறிவிப்பில் நர்சரி, கிண்டர்கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது. இதுகுறித்து தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும்.”


இவ்வாறு அவர் கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண