உயர் கல்வித்துறையில் பல்வேறு கல்லூரிகளில் முதல்வர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக கல்வித் தரம் கேள்விக் குறியில் இருப்பதாகவும் இதனால் மாணவர் சேர்க்கை முறையாக நடக்கவில்லை எனவும் பாஜக கடுமையாகச் சாடி உள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை ஆளும் தவெக அரசும், உயர்கல்வித் துறை அமைச்சரான விஸ்வநாதனும் சற்று கவனமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசுக் கல்லூரிகளில் இடம்

முந்தைய திமுக ஆட்சியில் அரசு கல்லூரிகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவால் தான், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விகிதம் பெருமளவு குறைந்து போனது. ஒரு காலத்தில் அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது, மிகப்பெரும் சாதனையாகவும், வளமான எதிர்காலத்திற்கான திறவுகோலாகவும் கருதப்பட்டது.

Continues below advertisement

அரசு இயந்திரத்திற்கே அவமானம்

ஆனால், தற்போது தகுதியான ஆசிரியர்கள், தரமான கட்டிடங்கள், நவீன ஆய்வகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசு கல்லூரிகளை தேர்ந்தெடுக்க யாரும் விரும்புவதில்லை என்பதே கசப்பான உண்மை. கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசு கல்விக் கூடங்களை நிராகரித்து விட்டு, மக்கள் தனியார் கல்வி நிலையங்களை நோக்கி படையெடுப்பது, அரசு இயந்திரத்திற்கே அவமானம்.

எனவே, சுமார் அரை நூற்றாண்டிற்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன், கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து கொண்டிருக்கும் உயர் கல்வித் துறையை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.