தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளால், 2500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 2021- ஆம் ஆண்டு கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தப் பள்ளிகளில் இந்த சாதனை சாத்தியமாகி இருப்பதாகவும் முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’கல்வியில் சிறந்த தமிழ்நாடு புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்! கல்வியால் சிறக்கும் நமது அரசுப் பள்ளி மாணவர்களைச் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற வைத்துப் பூரிப்படைகிறோம்.
2021- 22இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
2,358 மாணவர்கள் சேர்க்கை
அதனால்தான், கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்களும், ஆதி திராவிடர் (37) மற்றும் பழங்குடியினர் (169) பள்ளிகளைச் சேர்ந்த 206 மாணவர்களும், 93 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில் மேற்படிப்பு பயிலுகின்றனர். அதில் 41 பேர் IITகளிலும், 22 பேர் முழு உதவித் தொகையுடன் வெளிநாடுகளிலும் பயில்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடியில் நுழைவதற்கான முதற்படியை அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்களும் - ஆதி திராவிடர் (13) மற்றும் பழங்குடியினர் (55) பள்ளிகளைச் சேர்ந்த 68 மாணவர்களும் வெற்றிகரமாகக் கடந்துள்ளனர்.
உன்னதமான உயரங்களை அடைய வாழ்த்துகள்
பெரும்பாலும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த இந்த மாணவர்களின் கனவுகளை அடைவதற்குத் துணை நிற்கின்ற பெருமையோடு, இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் பலர் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைந்திட வாழ்த்துகிறோம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.