தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யவில்லை என்று மத்தியக் கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார். 


சென்னை கிண்டியில் பிஐபி அலுவலகத்தில் இன்று மத்தியக் கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


’’தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யவில்லை. 


வெறும் கல்வி அறியும், உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கையுமே ( GER) தரத்தை அளித்து விடாது. புரிந்துகொள்ளும் திறன், கற்றல் வெளிப்பாடு, வேலைவாய்ப்புக்கேற்ற படிப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள்தான் உண்மையான தரத்தை வெளிக்கொண்டு வரும்.


கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு பரிசீலனை


புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் நிலையில், மூன்றாவது மொழி என்பது இந்தி உட்பட எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த மொழியையும் தேசிய கல்விக் கொள்கை திணிக்கவில்லை. அதே நேரத்தில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதுதான் கல்விக் கொள்கையின் நோக்கம்.


மாநிலங்கள் அவரவர் விருப்பத்துக்கேற்ப கல்விக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்கின்றன. ஆனால் அது தரமானதா என்பதை ஆராய வேண்டும். அதனால்தான் தேசிய அளவில் தரமான கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.




தமிழ்நாட்டில் கல்வியின் தரம் நன்றாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை அமலானால், இன்னும் தரம் மேம்படும். புதிய கல்விக் கொள்கை குறித்துத் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசு தயாராக உள்ளது.’’


இவ்வாறு மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்கார் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா? என்று கேட்டதற்கு, ’’இந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பள்ளிகள் தர வேண்டும். இதற்காகவே அவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல ஏற்கனவே நடந்து வரும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முறையாக நடைபெற வேண்டும். இதையே புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது’’ என்று அமைச்சர் சுபாஸ் சர்கார் தெரிவித்தார்.


இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சித்தூரில் உள்ள ஸ்ரீ சிட்டி ஐஐஐடி இயக்குநர் கண்ணபிரான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.