தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை, சுமார் 8.27 லட்சம் பேர் எழுதினர். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி, 26-ம் தேதி வரை நடைபெற்றது. 7,545 பள்ளிகளில் 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மூலம் கல்வித்துறை வளாகத்தில் உள்ள SIEMAT ஹாலில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், மாவட்ட வாரியான முடிவுகளை தற்போது பார்க்கலாம்.
முதலிடம் பிடித்த மாவட்டம் எது.?
தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 95.2 சதவீத மாணாக்கர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், ஈரோடு மாவட்டம் 98.87 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் 98.05 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் 97.63 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் 3-வது இடத்தையும், நெல்லை மாவட்டம் 97.54 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் 4-வது இடததையும், திருச்சி மாவட்டம் 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது.
மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதங்களை பார்க்கும்போது, அதிலும் 98.24 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டமே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அடுத்தபடியாக, 96.97 சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
96.55 சதவீதத்துடன் திருச்சி மாவட்டம் மூன்றாவது இடத்தையும், 96.15 சதவீதத்துடன் தென்காசி மாவட்டம் 4-வது இடத்தையும், 96.12 சதவீதத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது.
