தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது.  இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.


இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32  சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இணைய வழி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


 செங்கல்பட்டு மாவட்ட முடிவுகள்


இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 11,455 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதேபோன்று  13 ஆயிரத்து 787 மாணவிகள் தேர்வு எழுதினர். மொத்தமாக 25 ஆயிரத்து 742 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 10 ஆயிரத்து 632 மாணவர்களும்,  13 ஆயிரத்து  275 மாணவிகளும் மொத்தம் 23 ஆயிரத்து 907 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்களின் தேர்வு சதவீதம் 92.82 ஆக உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.29 ஆக உள்ளது. மொத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.71 ஆக உள்ளது.  


 சாதித்த செங்கல்பட்டு


கடந்த ஆண்டை விட செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 2.19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கடந்த ஆண்டு விட மூன்று இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை  தமிழ்நாடு அளவில் பிடித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி செங்கல்பட்டு மாவட்டம் முன்னேறி உள்ளது.