Tamil Nadu 12th Result 2025 Centum Scorers: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், ஆங்கிலத்தில் மட்டும் ஒருவர் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கவில்லை.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் மாணவர்கள் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவியர்கள் நூற்று நூறு என முழு மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.

தமிழில் எத்தனை பேர்..!

12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகளில், ஆங்கில பாடத்தில் மட்டுமே ஒருவர் கூட நூற்றுக்கு நூறு என முழு மதிப்பெண்கள் எடுக்கவில்லை. மற்றபடி அனைத்து பாடங்களில் முழு மதிப்பெண்களை எடுத்து அசத்தியுள்ளனர். அதிகபட்சமாக, கணினி அறிவியலில் 9 ஆயிரத்து 536 பேரும், குறைந்தபட்சமாக விலங்கியலில் 36 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் 7 பேர் மட்டுமே சதமடித்த நிலையில், நடப்பாண்டில் ஆங்கிலத்தில் மட்டும் 68 பேர் சதமெடுத்துள்ளனர். குறிப்பாக தமிழில் 135 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து வரலாறு படைத்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு வெறும் 35 பேர் மட்டுமே சதமடித்து இருந்ததே குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 887 பேர் ஆவர். இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 ஆயிரத்து 853 பேர் ஆவர். ஆனால், கடந்த ஆண்டு நூற்றுக்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 352 மட்டுமே ஆகும்.

பாடவாரியாக சென்டம் எடுத்தவர் விவரங்கள்:

வரிசை எண் பாடங்கள் தேர்ச்சி சதவிகிதம் (%) 100 மதிப்பெண் பெற்றவர்கள்
1 தமிழ் 99.15 135
2 இயற்பியல் 99.22 1,125
3 வேதியியல் 98.99 3,181
4 உயிரியல் 99.15 827
5 கணிதம் 99.16 3,022
6 தாவரவியல் 99.35 269
7 விலங்கியல் 99.51 36
8 கணினி அறிவியல் 99.73 9,536
9 வணிகவியல் 98.36 1,624
10 கணக்குப் பதிவியல் 97.36 1,240
11 பொருளியல் 98.17 556
12 கணினிப் பயன்பாடுகள் 99.78 4,208
13 வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 98.78 273

அரசுப்பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் இருந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 98.32 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து ஈரோட்டில் 96.88 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 95.64 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.06 சதவிகிதம் பேரும், கடலூர் மாவட்டத்தில் 94.99 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.