10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கு விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்குகிறது என்று பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இன்று 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், பொதுத் தேர்வில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5.69 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்த மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியவில்லையே என்று கவலைகொள்ள வேண்டாம். ஒன்றரை மாதத்திலேயே துணைத் தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.
துணைத் தேர்வுகள் எப்போது?
10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலை 8 முதல் 15ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. எனினும் தேர்வு அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை. பின்னர் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பப் பதிவு எப்போது?
இதற்கான விண்ணப்பப் பதிவு மே 26ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 9ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்
இதில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இங்குள்ள மாணவர்கள், 97.75 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
