10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாடம் வாரியாக மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்ற விவரங்களைக் காணலாம். 

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை 4,35,247 மாணவியர்களும், 4,35,396 மாணவர்களும் என மொத்தம் 8,70,643 மாணாக்கர்கள் எழுதினர். இதில் சுமார் 8,21,105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 94.31% ஆகும். வழக்கம்போல மாணவர்களை விட மாணவியர்கள் 4.32% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தேர்ச்சி சதவிகிதம் 0.51% அதிகரித்துள்ளது. 

பாட வாரியான தேர்ச்சி சதவீதம்

இதில் பாட வாரியான தேர்ச்சி விகிதம் பார்க்கும்போது தமிழ் பாடத்தில் 98.43%, ஆங்கிலம் பாடத்தில் 99.44%, கணிதம் பாடத்தில் 97.36% பேரும்,  அறிவியல் பாடத்தில் 98%, சமூக அறிவியல் 97.93% பேரும் வெற்றி பெற்றுள்ளனர். 

Continues below advertisement

அதேசமயம் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை வரிசையில் தமிழ் பாடத்தில் 34 பேர் மட்டும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால் ஆங்கிலம் பாடத்தில் 92  பேர் பெற்றிருக்கின்றனர். மேலும் கணிதம் 3,194 பேர் 100க்கு 100 வாங்கியுள்ளனர். அதிகப்பட்சமாக அறிவியல் பாடத்தில் 10,476 பேர் சென்டம் போட்டுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 3,336 பேருக்கு முழு மதிப்பெண் கிடைத்துள்ளது. 

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 17,132 ஆகவும், ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் 2,774 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் 5 இடங்களைப் பெற்ற மாவட்டங்கள்

மேலும் முதல் ஐந்து இடங்களை புதுக்கோட்டை,சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் அரசு பள்ளிகளில்  சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்கள் பெற்றிருக்கிறது. மேலும் 13,292 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் 11,416 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மேலும் 370 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில் அதில் 354 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.