10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், மே 22ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம்.
மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இந்த இணைய முகவரியை க்ளிக் செய்து பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
டிஜி லாக்கர் செயலி மூலமாகவோ, வாட்ஸ் அப் மூலமாகவோ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறியலாம். பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் வழியாகவும் பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்றும் தேர்வு முடிவுகளைப் பெற முடியும்.
தேர்வு முடிவுகள் எப்படி?
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மொத்தம் 94.31 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 4.32% அதிகமாக தேர்ச்சி பெற்று முத்திரை பதித்துள்ளனர்; இதில் மாணவிகள் 96.47 சதவீதமும், மாணவர்கள் 92.15 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் அதிக அளவிலான தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இங்கு 97.57 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாட வாரியான தேர்ச்சி விகிதம்
தமிழ் பாடத்தில் 98.43%, ஆங்கிலப் பாடத்தில் 99.44%, கணித பாடத்தில் 97.36% பேரும், அறிவியல் பாடத்தில் 98%, சமூக அறிவியல் பாடத்தில் 97.93% பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
மே 22ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம். விடைத் தாள் நகலுக்கான விண்ணப்பப் பதிவும் மே 22ஆம் தேதி தொடங்க உள்ளது. 27ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல், மறு மதிப்பீடு எப்படி?
மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கி, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதே ஜூலை 8 முதல் துணைத் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
