12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் பொதுத் தேர்வுகள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின்போது முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. இது மாணவர்களுக்கு சாதகமா பாதகமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

Continues below advertisement

தொடங்கிய விடைத்தாள் திருத்தம்

2026ஆம் ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஏப்ரம் 2ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் ஆயிரக்கணக்கான முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத் தாள்கள் திருத்தமும் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ஆம் தேதி அன்று முடிவுகள் வெளியாகின்றன.

Continues below advertisement

நூற்றுக்கு நூறு பெறும் மாணவர்களின் விடைத்தாள் ஆய்வு

இந்த நிலையில், நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் பொதுத் தேர்வுகள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின்போது முழு மதிப்பெண்கள் பெறும் தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா, அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். கவனமாக ஆய்வு செய்து கையொப்பம் இடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், ’’மார்ச் 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு (Arrear) பொதுத்தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தொடர்பாக அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் 14.03.2026 அன்று நடைபெற்ற மண்டல / முகாம் அலுவலர்களுக்கான கூட்டத்தில் மதிப்பீட்டுப் பணி தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்காண் மண்டல / முகாம் அலுவலர்களுக்கான கூட்டத்தில் அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் மதிப்பீட்டு பணியின்போது முழு மதிப்பெண்கள் (Centum) பெறும் தேர்வர்களின் விடைத்தாட்களை கவனமாக கூர்ந்தாய்வு செய்து கையொப்பமிட வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனவே, அனைத்து முகாம் அலுவலர்கள் தங்களது User id மற்றும் Password-ஐ பயன்படுத்தி, Valuation Camp Report -> Evaluation Centre Report -> Centum Mark என்ற வழியில் க்ளிக் செய்ய வேண்டும். முழு மதிப்பெண்கள் பெற்ற தேர்வர்களது பட்டியலை பதிவிறக்கம் செய்து முகாம் அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சாதகமா பாதகமா?

பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை கவனமாக மீண்டும் ஆய்வு செய்வது, தவறுகளைத் தவிர்த்து, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் என்று கூறப்பட்டாலும், இதனால் தங்களின் சென்டம் குறையும் என்று மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.