மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பப் பதிவு ஏப்ரல் மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டு இந்தச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பப் பதிவு எப்போது என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE Act) தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனினும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.


2010 முதல்  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்


இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது.


முன்னதாக, இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களைப் பொது வெளியில் தனியார் பள்ளிகள் அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்தது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதாகவும் கூறப்பட்டது.



 


குலுக்கல் முறை அறிமுகம்


இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு முதல் இந்த முறை அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 9,000 தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட 1.1 லட்சம் இடங்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.


இந்த நிலையில் 2023-24 கல்வியாண்டில் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு 2023 மார்ச் 20 முதல் ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு இந்தச் சட்டத்தின்கீழ் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இதுவரை விண்ணப்பப் பதிவு தொடங்கப்படவில்லை. இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  ''மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பப் பதிவு ஏப்ரல் மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்கும். இதற்கான வலைதள வடிவமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பணி முடிந்ததும் விண்ணப்பப் பதிவு குறித்த அறிவிப்பு உடனேவெளியாகும்'' என்று தெரிவித்தனர்.


எப்படி விண்ணப்பிப்பது?


சட்டப்படி சேர்க்கை கோரும், குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகைச் சீட்டைத் தவறாது வழங்க வேண்டும்.


விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.